முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

பொருநராற்றுப்படை-அடிநேர் உரை


பொருநராற்றுப்படை

முடத்தாமக்கண்ணியார்

 

இடையறாத (செழுரூ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த பொருநனே,
(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)பத்தலினையும்;
விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,   5
(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்;
வளையில் வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற
(பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்;    10
(உவாவிற்கு)எட்டாம் நாள் (தோன்றும்)திங்களின் வடிவினையுடையது ஆகி,
உள்நாக்கு இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாயினையும்;
பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்;
கருநிறப்பெண்ணின் முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும்,
(ஒன்றோடொன்று)நெருங்கின இருப்பையுடையதும், திண்ணிய பிணிப்புடையதும் ஆகிய வார்க்கட்டினையும்; 15
ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய, தொடர்ச்சியையும்,
(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,        20
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை -
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,
சீர்களை உடைய பண்ணை நீர்மையுடன் பரப்பி -
(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்,               25




கொலை செய்யும் வில் (போன்ற)புருவத்தினையும், அழகிய கடையையுடைய குளிர்ச்சியுள்ள கண்ணினையும்,
இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,
பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும்,
மயிரைக் குறைக்கின்ற கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும்,
பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்,    30
நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்,
அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,
நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் (போலும்)மெல்லிய விரலினையும்,
கிளியின் வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெரிய நகங்களையும்,
(பிறர்க்கு)வருத்தம் எனத் தோற்றின தேமல் அணிந்த மார்பினில்                             35
ஈர்க்கு(ம்) நடுவே போகாத எழுச்சியையும் இளமையையும் உடைய அழகிய முலையினையும்,
நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும்,
உண்டென்று பிறரால் உணரப்படாத வருந்துகின்ற இடையினையும்,
(பல)வண்டினங்களின் இருப்பை ஒத்த பலமணி (கோத்த வடங்களையுடைய மேகலை அணிந்த)அல்குலையும்,
பெரிய பெண் யானையின் பெரிய கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும்,     40
பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட திருத்தமான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த
ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)-
சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால்
பரல் கல்லாகைய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி,
மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,                        45
நல்ல உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால்
பெடை மயிலின் சாயலினையும் உடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி
பாடின தாளத்திற்கு ஏற்ப, நாள்தோறும்
யானை உலாவரும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி,
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி,                              50
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு -
பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து
(திருவோலக்க மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல -                          55
(பல்வேறுவகைப்)பாடல்களையும் பற்றி(த் தோன்றும்) இசைப்பயனையுடைய யாழை உடைய
கூத்தர்கட்குத் தலைவனே, (பிறர் மனத்துக்)கொண்டதை(க் குறிப்பால்) அறிய வல்லோய்,
(வழி)அறியாமையினால் (இவ்)வழியைத் தப்பி (வேறொரு வழியில்) போகாமல்,
இவ்வழிக்கண் (என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே,
விரும்பிக் கேட்பாயாக, புகழை மேம்படுத்த வல்லோய்,                                      60
கொல்லுகின்ற பசியால் வருந்தின உன் கரிய பெரிய சுற்றத்தோடு,
நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி
எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,
பழுத்த மரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப் போல, யானும், அவனுடைய
இழுமென்றெழும் ஓசையினையுடைய (அகலமான)வெளியை உடைய மதிலில்,               65
விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள்
(வாயிலோனுக்குக்)கூறாமற் புகுந்து, என்னுடைய துன்பம் தீர,
இளைத்த உடம்பையுடையேன் இளைப்பில்லாதவனாய் ஆகி,
படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப,
கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில் (தோற்றுவித்த)                        70
இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,
ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே - (தன்னோடு)பொருந்திய
உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,
(தன்)உபசரிப்பிற்கு வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து,                   75
(தன்)கண்ணில் படும்படியாக (தனக்குப்) பக்கத்து இடத்தில் (என்னை)இருத்தி,
(என்னைக்)கண்ணால் விழுங்குவது போன்ற குறையாத பார்வையால்,
உருக்கக்கூடிய(வெண்ணெய் முதலிய)வை போன்று (என்)எலும்பு(ம்) (நெகிழும்படி)குளிர் மூட்டி,
ஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து,
வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு                              80
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி,
பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நன்கமைந்ததும்,
(மென்மையால்)பாம்பின் தோலை ஒத்ததும் ஆன துகிலை நல்கி,
முகில்களோ என்று மருளுதற்குக் காரணமான மகிழ்ச்சியை விளைவிக்கும் மாடத்தில்,
இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்,                                85
குற்றம் அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும்
வார்த்துத் தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி,
நிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி,
மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது - மேலும், அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து,                      90
(மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே
(இம்மை உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப,
வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,                       95
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி,
வலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படியும்,
(அரச முறைமையை இன்னும்)கற்றுக்கொள்ளாத (எம்)இளைஞர் (எம் வரவைக்)கூவி எடுத்துக்கூற,              100
விரைவாக அழைத்து, ‘வருக வருக' என்று உரத்துச் சொல்லி,
அரசனைக் காணும் முறைகளைச் செய்து முடித்த பின்னர், காலமறிந்து,
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் உண்பாயாக' என்று வற்புறுத்தி,
இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை                105
மாற்றி மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து,
புழுக்கினவும் சுட்டனவும் ஆகிய அவற்றை(த் திகட்டிப்போய்) வெறுக்கிறோம் என்கையில், இனிமையுடைய
வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி,
மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட,                                         110
(இவ்விதமாய்)மகிழ்கின்ற செவ்வியைப் பலநாளும் பெற்றுக்கழித்து, ஒருநாள்,
சோற்று உணவை(யும்) கொள்வாயாக' என்று வேண்ட, (முல்லை)அரும்பின் தன்மையையுடைய
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்,
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி 115
உண்டபொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து,
கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி,
மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து, ஒருநாள்,
குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற        120
செல்வனே, (யாங்கள்)செல்வேம் - எம்முடைய (பழைய)சுற்றத்தாரிடம், (உம்மை)விட்டு' என்று
மெதுவாகச் சொன்னேமாக, ‘(இவ்வளவு)சீக்கிரம்
போகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு' என்று கூற
வெகுண்டவனைப் போன்று (எமக்கு)வருத்தத்தைச் செய்த பார்வையுடன்,
துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன்,                125
பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக' என்று
தான் அறிந்த அளவால் தரத்தர, யானும்
யான் அறிந்த அளவில் (எனக்கு)வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,
(என்)இல்லாமை (முற்றிலும்)அற்றுப்போக வந்தேன், வென்ற வேலினையும்
அழகினையும் பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன்,                            130
முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன்,             
(தன்)தாய் வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து),
(தன் வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய,
(ஏவல்)செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக,
கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி,                       135
(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று,
பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,
சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது -
இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் செருக்கி,                             140
முலையுண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,                              
(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,
கரிய பனையாகிய போந்தையின் மாலையினையும், கரிய கொம்பினையுடைய,
அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்,
உயர்ந்த பெரிய தலையில் சிறப்பாகச் சூடிய                                                145
இரு பெரிய மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி,                                   
வெண்ணி என்கிற ஊரில் பொருத அச்சந் தோன்றுகின்ற வலிமையையுடைய முயற்சியையும்,
கண்-நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகாற்சோழனின்,
திருவடி நிழலின் பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி
வணங்கி (அவன்)முன்னே நிற்பீராயின், (உம்)வறுமை நீங்க                                   150
ஈன்ற பசு (அதன் கன்றை நோக்கும்)விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து, உம்
கைத்திறனை(கலையை)(த் தான்) கேட்டு முடிவதற்கு முன்னரே, விரைந்து
பாசியின் வேர் போல் அழுக்குடன் சுருங்கிப்போன,
தையலையுடைய துணிகளை நீக்கி, தூய
(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து,                                  155
பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக' என்று,
பூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர,
தினம் தினம் (வேண்டாம் வேண்டாம் எனக்)கையைக் கவிழ்க்கும் அளவிற்குக் குடித்து,
நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை,
சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,                                               160
நூலால் கட்டாத நுண்மையினையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரிமாலையை
வெண்மையான ஒளியையுடைய முத்தத்தோடு பாடினி சூடத் தந்து,
(யானைக்)கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரில்,
(சாதிலிங்கம்)ஊட்டின தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசையப்,
பாலை ஒத்த (நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேரப் பூட்டி,                        165
(தன்)காலால் ஏழு அடி பின்னே வந்து, தார்க்குச்சியில்
முள்ளை அகற்றி, ‘(இவ்வாறு)ஏறுவாயாக' என(க்காட்டி) ஏறச்செய்து, வீறுபெற்ற
யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கும் முறைகளை (உனக்குத்)தந்துவிட்டு, நீர் (நன்கு)வாய்க்கப்பெற்ற
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
நல்ல பல ஊர்களையுடைய நாடுகளுடனே, நல்ல பல,                                       170
வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன், (உமக்கு வந்த)வரவின் போது
பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக
(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு,         175
(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக' என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத்
திரை முரிந்த கரிய கடலின்
கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் -                              180
தாழ்ந்த தெங்கினையுடைய குளிர்ந்த மரச்சோலைகளிடத்தே,
- கூடு பொருந்தின வளமிக்க குடியிருப்புகளில்,
(உதிரத்தால்)சிவந்த சோற்றையுடைய படையலை விழுங்கின
கரிய காக்கை அகத்தீடான உணவை வெறுத்ததாயின்,
மனை(யைச் சூழ்ந்த) நொச்சியின் நிழலில்,                                                  185
(மணலுக்குள் முட்டை)பொரித்து வந்த ஆமையின் குஞ்சைப் பின்னர் தின்பதற்காக பாதுகாத்து வைப்பவும்,
இளையோர் மணல்வீடு(கட்டி) விளையாடவும், முதியோர்
(நீதி வேண்டி)அவைக்களம் புகும்பொழுதிலேயே பகையின் மாறுபாடு (அகன்று அன்பு)கொள்ளவும்,
முடக்காஞ்சி மரத்திலும், செம்மருத மரத்திலும் இருந்த,
மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மயில்கள் ஆரவாரிக்க -                              190
பசிய பாகலான பலாப்பழத்தினுள் கொத்தாகவுள்ள,
சிவந்த சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று - (இந்த ஆரவாரத்துடன்)
அறைத்தலைச் செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிதலைச் செய்யும் நெற் கழனிகளிடத்தும்,
திரண்ட உழவருடைய பண்ணொலி மிகுதியாய் ஒலிப்பதால் -
நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும்,                     195
தளிரையுடைய புன்கினையும், தாழ்ந்த சோலைகளும்,
தளிர்விட்ட ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாய் உள்ள
அந்நாட்டை வெறுத்தனவாயின், அவ்விடத்தைவிட்டு அகன்று மாறிப்போய்,
மலர்கின்ற செம்முல்லையினையும், பரந்த காந்தள் மலரினையும்,
மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்,                  200
பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய,
நல்ல முல்லைக் காட்டில் சென்றும் (அந்நில ஒழுக்கத்தையும்)வெறுத்தனவாயின்,
சுறாமீன் திரியும் கரிய கடலில்
இறவினைத் தின்ற திரண்ட நாரைகள் (இருக்கும்)
பூக்களையுடைய புன்னையின் கொம்புகளில் தங்கின்,                                        205
உயர்ந்த அலையின் ஆரவாரத்திற்கு வெருவி,
இனிய பனையின் மடலில் தங்கவும்,
கொத்துக்கொத்தான (காய்களைக் காய்க்கும்)தெங்கினையும், குலையினையுடைய வாழையினையும்,
கொழுவிய காந்தளினையும், மலர்ந்த சுரபுன்னையினையும்,
துடி(யின் ஓசை போன்ற ஓசையையுடைய) பேராந்தையையுடைய குடி(யிருப்பை உடைய) பாக்கத்தில்,   210
யாழ்(ஓசை போலும்) வண்டின் பாட்டுக்கேற்ப,
தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில் (இருக்கும்)
நிலவு (போலும்) இடுமணல் பலவற்றில் இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து செல்ல,
தேனாகிய நெய்யோடு, கிழங்கை(யும்) விற்றவர்கள்
மீனின் நெய்யோடு நறவையும் மாறாகக் கொண்டுபோகவும்,                                 215
இனிய கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,
மானின் தசையோடு கள்ளையும் மாறாகக் கொள்ளவும்,
குறிஞ்சிப்பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தலாகிய
நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடவும்,
முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்                                 220
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்,
காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் கொத்தித் தின்னவும்,
வீட்டுக் கோழிகள் தினையைத் தின்னவும்,
மலையின் மந்திகள் கழியில் மூழ்கவும்,
கழியில் திரியும் நாரைகள் மலையில் கிடக்கவும்,                                          225
குளிர்ந்த நிலப்பகுதிகளையுடைய நான்கு கூறாகிய நாடுகள் திரண்டு,
(இம்)மண்ணுலகத்தே, குற்றமின்றி,
ஒரு குடைக்கீழ்(ஒரே ஆட்சியில்) ஒன்றெனச் சாற்ற,
நெடுங்காலம் ஆண்ட பெரிய நட்பையும்,
அறத்தோடு பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய,                         230
அத் தன்மையையுடையோனே (நீ)வாழ்வாயாக, வெல்கின்ற வேலையுடைய தலைவனே,
(பகை)அரசர் நடுங்கும்படி விளங்கி, பல்வேறு மாண்புகளையுடைய
பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினால்,
கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்,
அருவிகள் -- பெரிய மலைகளில் -- கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகவும், இவை ஒழிந்த   235
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
பெரும் பஞ்சம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும் -
நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்,
துறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து -
நுரையைத் தலையில் உடைய ஆரவாரத்தையுடைய நீர் குளத்திலும் கோட்டகத்திலும் புகுதொறும்,     240
நீராடும் மகளிர் கடுகக் குடைந்து விளையாட -
குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும்
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி
உலுக்கிக் குலுக்கிக் கட்டிய மூடைகள் வெற்றிடம் இல்லையாகும்படி (எங்கும்)கிடக்கும்,              245
செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
ஓராயிரம் கலம் என்னும் அளவில் நெல்லை விளைச்சல் ஆக - (இவ்வாறான)
காவிரியாறு பாதுகாக்கும் நாட்டை உரித்தவன்.

No comments:

Post a Comment