முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

சிறுபாணாற்றுப்படை-அடிநேர் உரை


சிறுபாணாற்றுப்படை

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

 

மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
இடிந்த கரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த
புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)இடமெல்லாம் அறல்பட்டு,                            5
மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
இரும்பின் வெப்பம் போன்ற தன்மைத்தாகி, மெல்ல நடந்து சென்று,
வெயிலின் வெப்பம் ஏறிய வெவ்விய பரல்கள் கால்களைக் கிழிப்ப,
இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில்
காலை ஞாயிற்றின் கதிர் வெம்மையைச் செலுத்துதலால்,                                   10
பாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய,
காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி -
மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையின் எழிலினைக்கொண்டு, மருட்சியடைந்து,
எண்ணெயினால் குழைந்து இருண்ட கூந்தலினையும்; கூந்தலைப் போன்று,
(நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பலவும் ஒருசேர்ந்த              15
மயில்கள் - அம்மயில்கள் (நாணி)மறைந்துகொள்ளும் மென்மையினையும்; ஓடியிளைத்து
வருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி,
ஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; அடியினோடே தொடர்புடைத்தாய்,
இழுக்கப்பட்டு நிலத்தில் படியும் கரிய பெண்யானையின் பெரிய கையைப் போல
திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகளையும்; தொடை போன்று                  20
பெருமையையுடைய மலையில் வளரும் வாழை - அவ்வாழையின்
பூவைப்போல் பொலிவு பெற்ற மயிர்முடிப்பினையும்; அம் மயிரினில்(சூடுகின்ற)
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி,
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும்
புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து,                     25



அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்; (அம்)முலைகளைப் போன்ற
பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்; அப்பற்களைப் போல
(கஞ்சங்)குல்லையாகிய அழகிய முல்லை நிலத்தில் குவிந்த அரும்புகள் மலர்ந்த
முல்லை சூடுதற்கமைந்த கற்புடைமையும்; மெல்லிய இயல்பினையும்;                       30
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை
கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க,
பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,                               35
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
இயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க,
(புரவலர் இல்லாததால் பரிசிலர்)இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி,
(தன்னை)வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால்,
(வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,                             40
கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளவிய இதழையுடைய
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,                                 45
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் - பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்; அதுவன்றியும் 50
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
வெட்டுண்ட வாயையுடைய குறிய மரக்கட்டையை கூர்மையான உளிகள் (உள்ளேசென்று)குடைந்த
கைத்தொழில் திறத்தால் செம்மைசெய்து கடைந்த (மாலையணிந்த)மார்பினையுடையதும்,
(நெட்டி என்ற தாவரத்தின் தண்டால்)செய்த பூவின் மாலையை செவியடியில் (நெற்றிமாலையாகச்) சூட்டப்பட்டதும்,
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும்,           55
(அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர்
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,
தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற,  60
விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
தத்திவரும் நீரை(த் தனக்கு) எல்லையாகவுடைய கொற்கை அரசனும்;
தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்,
கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின்,    65
தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய,
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே; அதுவன்றியும்,
நறிய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே                            70
(சிவப்புச் சாயமாகப் பயன்படுத்தும்)தம்பலப்பூச்சியை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்,
எழுகின்ற (பெரிய)முலையை ஒத்த வளவிய முகை நெகிழ்ந்து,
அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து,
அழுக்கில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கம் தோய்ந்ததைப் போன்ற
சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை,                 75
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
கிழக்கு நாடுகளின் காவலருடைய குடியிலுள்ளான் - பகைவரின்
உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (திணவால்)தேய்க்கும்                   80
(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும்,
(தான்)விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் - அவனது
(தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே; அதுவன்றியும்,
மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்துக்
காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த                                               85
அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்,
பெரிய மலை நாட்டையுடைய பேகனும்; வண்டுகள் உண்ணும்படி
நறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த
சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரினைக் கொடுத்த,
மிகுகின்ற வெள்ளிய அருவி குதிக்கும் மலைச்சரிவுகளையுடைய                            90
பறம்பின் அரசன் பாரியும்; ஒலிக்கும் மணியினையும்,
வெள்ளிய தலைச்சிறகுகளையும் உடைய குதிரையோடு, (தன்)நாட்டையும், (ஏனையோர்)வியக்கும்படி
அருளினையுடைய நன்றாகிய மொழியினால் இரவலர்க்குக் கொடுத்தருளியவனும்
கொற்றவை வீற்றிருக்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும்
இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்; ஒளி விளங்கும்        95
நீலமணியினையும், தனக்கு நாகம் கொடுத்த ஆடையினையும்,
ஆலின் கீழ் இருந்த இறைவனுக்கு விரும்பியவனாய் கொடுத்தவனும்,
வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும்,
ஈடுபாடுள்ள நல்ல சொல்(லினையும் உடைய) ஆய் என்னும் வள்ளலும்; பெருமையுடைய மலையில்
கமழும் பூக்களையுடைய பக்க மலையில் (நின்று)அழகுபெற்ற நெல்லியின்                   100
அமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும்,
எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்,
ஆரவாரமுள்ள கடல்(போலும்) படையினையும் உடையவனும் ஆகிய அதிகமானும்; மறையாமல்,
நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்,            105
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடை
செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; செறிந்த கொம்புகளிடத்தே
நறிய பூக்கள் நெருக்கமாக அமைந்த இளமை முதிர்ந்த சுரபுன்னையையும்,
சிறிய குன்றுகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவனும்,
காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும் ,                            110
ஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்; என்று கூறப்பட்ட அக்காலத்தே,
(தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு மாற்றான திணிந்த தோளினையுடை
எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை,
பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி
ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும்,   115
நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,                       120
குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய
மிக்க புலி(போன்ற) வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும்,
யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும்,
பிடியானைத் திரளை(ப் பலர்க்கும்)வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும் உடையவனும்,
பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய      125
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
(பிறரால்)பொறுத்தற்கரிய (குடிப்பிறந்தோர்க்குரிய)முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடை
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக - இன்று,
திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,                              130
கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது,
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன - உட்துளை(கொண்ட) காளான்:
மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,           135
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு; (மதம்)வீழ்கின்ற கதுப்பினையும்,                140
கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று
யாம் அவ்விடத்தினின்றும் வருகின்றோம், நீங்களும்
இவ்விடத்தே உம்மை விரும்பி இருக்கின்ற கரிய பெரிய சுற்றத்தோடேயும்,
பெருமை(கொண்ட) நெஞ்சோடேயும் (அவ் வள்ளல்பால்)செல்வீராயின்,                        145
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும்,
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,
நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,
கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற,                            150
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,
(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் -
உயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்                       155
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, பெரிய தோளினையும்,
திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்,
(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட,
பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,
கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய  160
அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி,
தாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே,
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்,
கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும்,               165
கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,
செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும்,
கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும்,
முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்,
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து,                170
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து,
வெற்றி (தரும்)வேலின் நுனி போலப் பூத்த கேணியையுடைய
வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின் -
மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடி(யில் இருக்கின்)
எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை,                        175
தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு
ஆமானின் சூட்டிறைச்சியோடு (நும் பசி தீர)மனநிறைவடையப் பெறுகுவீர்,
நறிய பூக்கள் மாலை தொடுத்த(தைப் போன்று மலர்ந்துள்ள) பருவம் வாய்த்த கொம்புகளையும்,
குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
(தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து       180
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பசிய இலையினுடைய
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு
திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பை ஒப்பத் தோன்றும்,                                     185
ருத ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயலினையுடையதும்,
சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்
அழகிய குளிர்ந்த அகழியை உடையதும் ஆகிய, அவ்வள்ளலின் ஆமூரைச் சேர்திராயின் -
வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய,               190
பிடியின் கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,
கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின
குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை
கவைத்த காலினையுடைய நண்டின் கலவையோடு பெறுவீர்,                                 195
தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,
பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய
தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால்                      200
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்,
தூரமானதும் அன்று, சிறிது அருகிலுள்ளதே,
கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரிய மறை (கற்றுணர்ந்த)நாவினையுடைய அறிவுடையோர்க்கோ,
கடவுள் - பெருமையுடைய (மேரு)மலை வாழும் - (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற              205
மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி -
(அவ்வள்ளலின்)செய்ந்நன்றி அறிதலையும், சிற்றினம் சேராமையும்,
இன்முகம் உடைமையையும், இனியன் ஆதலையும்,
செறிந்து விளங்குகின்ற சிறப்பினையுடைய (பல கலைகளையும்) அறிந்தோர் புகழ,
(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும்,            210
(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,
வாள் வலியால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,
(தான்)எண்ணியதை முடிக்கவல்ல தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும்,
ஒரே ஒரு வழியில்(மட்டும்)செல்லாமையையும், (பிறர் மனங்களின்)ஓட்டத்தைப் புரிந்துகொள்ளுதலையும்,
செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ,                  215
அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும்,
(புலவரின்)சிறப்பை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை)
பரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,
பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று,
இனிய மகிழ்ச்சியைச் செய்யும் குழாமில் இருந்தவனை அணுகி -                            220
பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று,
அழகிய தண்டினிடத்தே செறியச் சுற்றின நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
மணியை நிரைத்து வைத்ததைப் போன்ற அழகினையும்; பொருந்தச் செய்து,
வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட (தொழில்)வகை அமைந்த குடத்தின் மேல் உள்ள,
காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,                                                 225
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு,
அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி, ‘பலகாலும்                                       230
முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்' என்றும்,
வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்' எனவும்,
உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்' எனவும்,
தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்' எனவும்,
நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில் - மாசில்லாததும்,                               235
மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து,
பாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து,
(காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கவர்த்த கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய,
பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய,  240
மடைநூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை,
ஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த
இள வெயில் (தரும்)ஞாயிற்றை எள்ளி நகையாடும் தோற்றமுடைய,
விளங்குகின்ற பொன்(னாற்செய்த) (உண்)கலத்தில் (நீ)விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து,
குறைவுபடாத விருப்பத்தால் தானே நின்று உண்ணச்செய்து,                                  245
வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
வெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து,
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி, (அதன்)பின்னர்,
(தன்)படைத்தலைவர் கொண்டுவந்த நல்ல நிறத்தினையுடைய பொருள் குவியலோடு,
கூதிர்க் காலத்து வானில் பால் (போலும்)ஒளியைப் பரப்பி,                                    250
(முழு)உருவ அழகுத் திங்கள் ஒளிவட்டம் கொண்டாற் போல,
கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
(பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்,
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல,                                          255
உள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த (மேற்)பலகையினையும்,
வன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து,
ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு,
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,  260
அன்றே விடுப்பான் அவனுடைய பரிசில் - மெல்லிய தோளினையும்,
துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர்
அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல்
(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மஞ்சின் இடையே (அணையாக)விரித்து,
தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்,        265
உரும் (தான் சேறற்கு)இடித்துச் சென்ற (பிறர்)ஏறுதற்கு அரிதாகிய உச்சியை உடைய,
மலைகள் மிக்க நிலத்திற்குத் தலைவனாகியவனான - கொய்யப்பட்ட தளிர் விரவின மாலையினையும்,
(பிறர்பால் நில்லாதே)போகின்ற புகழ் (தன்னிடத்தே)நிலைபெறக் காரணமான குணத்தையும் உடைய -
நல்லியக்கோடனை நீயிர் விரும்பியவராய்ச் செல்வீராயின்.

No comments:

Post a Comment